Saturday, May 29, 2010

உறவுகள்

ஆராரோ பாடி
அள்ளி எடுத்து அணைத்துக் கொஞ்சி
மூக்கைப் பிடித்து சங்கு புகட்டி
முழங்காலில் கிடத்தி
எண்ணெய்க் குளியல் நடத்தி
சாம்பிராணிப் புகையிட்டு
கருமையில் பொட்டிட்டு
தூளியில் ஆடவிட்டு
தூங்கவைக்க அம்மச்சி வேணும்

தத்தித் தாவும்போதும்
தரையில் உருளும் போதும்
சுவர் பிடித்து நடந்து பழகி
சுளுக்கு விழுந்து புரளும்போதும்
பந்து உருட்டி ஆடும் போதும்
பாட்டுப்பாடி குதிக்கும் போதும்
மழலையில் உளறும் போதும்
மண்ணை அள்ளித் திண்ணும் போதும்
கைதட்டி ரசிக்கவும்
யானை அம்பாரி தூக்கவும்
தாத்தா வேணும்

ஊருலா தூக்கிச் சென்று
குச்சிஐஸ் வாங்கித் தந்து
குட்டிக்கர்ணம் சொல்லித் தந்து
குள்ளமாய் நடந்து காட்டி
குமிழ்குமிழாய் சிரிப்பு காட்டி
குட்டித் தொப்புளில் ,
வாய் வைத்து சத்தமெழுப்பி
என் விரலில் சிக்கிய முடியை
சிணுங்கிச் சிணுங்கி மீட்டெடுத்து
தூங்கும் போது எனை ரசித்து
மற்ற நேரம் அழ வைத்து
உலகையே விலை பேசி
எனக்காக அதை வாங்க
தாய்மாமன் வேணும்

பாலுக்கு அழும்போதெல்லாம்
அம்மாவை எழுப்பி
வெற்றிலை வாயோடு
முத்தவரும் பாட்டியை
முறைத்து ஒதுக்கி
வட்டிலில் சோறெடுத்து
வட்ட நிலா சுட்டிக்காட்டி
மசித்து மசித்து வாயில் திணித்து
உடை உடுத்தி அலங்கரித்து
அக்கறையாய் கவனித்து
பெறாமல் பெற்ற பிள்ளையாய்
சீராட்டி வளர்க்க
சித்தி வேணும்

என் அப்பாவைக் காதலித்ததால்

அத்தனை உறவுகளையும்
இழந்தது

நீ மட்டுமல்ல...

நானும்தான் அம்மா!