உலக்கை போட்டு
ஒதுக்கிய நாளில்தான் – நான்
‘பெண்’ என்று உணர்ந்தேன்
தம்பியைத் தொடுவதும்
தப்பென்றானது.
அப்பா முகம் கூட
அடுக்களைக்
கதவிடுக்கில்தான் தெரிந்தது.
நிமிர்ந்து நடப்பதும்
நேர் கொண்டு பார்ப்பதும்
உரக்கச் சிரிப்பதும்
உருண்டு படுப்பதும்
இனி கூடாதென்றாள்
போன தலைமுறைக் கிழவி!
பள்ளிச் சீருடை
குதிகால் மறைத்தது.
பாவாடை தாவணிக்குள் -என்
பால்யம் மறைந்தது.
அம்மா மடிக்கு நெருப்பானேன்
அப்பா மனசுக்கு சுமையானேன்.
ஆக்கர் விட்டு - நான்
பம்பரம் ஆடிய வாசல்,
நொண்டி அடித்து – நான்
பாண்டி ஆடிய வாசல்,
முட்டிக்கால் மண்ணில் பதித்து –நான்
கோலிக்குண்டடித்த வாசல்
இப்போது..,
கோலம் பழகும் இடமானது.
வீட்டுப்பாட நோட்டில்
சமையல் குறிப்பும் – வீட்டுக் குறிப்பும்
இடம் பிடித்தது.
விவரம் அறிந்தேன்
வெகுளித்தனம் மறந்தேன் – என்
பெயர் சொல்லி அழைத்தாலும்
வெட்கப்பட்டேன்.
உலக்கை போட்டு
ஒதுக்கிய நாளில்தான் – நான்
‘பெண்’ என்று உணர்ந்தேன்
Subscribe to:
Post Comments (Atom)
Very Nice Ma'am !
ReplyDeleteromba supera irukku mathi............very nice........excellent
ReplyDelete